Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்கள் விற்பனை – இந்து சமய அறநிலையத் துறைக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

Chennai_High_Court

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவற்றின் வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்களை விரிவான அறிக்கையாக 4 வாரங்களில் தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள், தனிநபர்களுக்கு அரசு வழங்கியுள்ளது எனவும், பால் கொடுப்பதை நிறுத்திய இந்த பசுக்கள் அடிமாடுகளாக 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக அளித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தனிநபர்களுக்கு பசுக்களை வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட கால்நடைகளை பாதுகாக்க உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும், 2000ம் ஆண்டு முதல் 2021 வரை கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்கள், காளைகள், கன்றுகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

கோவில்களில் கால்நடைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என கண்காணிக்க குழு அமைக்கவேண்டும் எனவும், கோசாலைகளுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களை தனிநபர்களுக்கு இலவசமாக வழங்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவில்களின் சொத்துக்கள் அரசின் சொத்துக்கள் அல்ல எனவும், கோவில் சொத்துக்களை மதம் சார்ந்த விவகாரங்களைத் தவிர பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், தானம் வழங்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி, மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவற்றின் வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்களை விரிவான அறிக்கையாக 4 வாரங்களில் தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஐந்து வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp