தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மிக முக்கியமான வர்த்தகத் துறையாக விளக்கும் ஐடித்துறையில் முதலீடுகளை ஈர்க்க புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய ஆலோசனை செய்து வருவதாகத் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சரான டி மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு 10 வருடம்
தமிழ்நாட்டுக்கு வர இருந்த வெளிநாட்டு முதலீடுகள் பல கடந்த 10 வருடத்தில் கர்நாடக மாநிலத்திற்கு நிறையச் சென்றுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் கடந்த 10 வருடத்தில் இத்துறையில் இருந்த மந்தமான வளர்ச்சி வாய்ப்புகள் தான் எனத் தகவல் தொழில்நுட்ப அமைச்சரான டி மனோ தங்கராஜ் கூறுகிறார்.
முக.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் முதல்வர் முக.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஐடி பார்க் கட்டப்பட்டு, அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், அதன் மூலம் தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் எனக் கனவுத் திட்டத்தை வகுத்துள்ளார் என்றும் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
புதிய டைடல் பார்க்
மனோ தங்கராஜ் தற்போது 114 கோடி ரூபாய் முதலீட்டில் சிறப்புப் பொருளாதாரப் பகுதியில் 2வது டைடல் பார்க் கட்டும் திட்டத்தை ஆய்வு செய்து வருகிறார். இத்திட்டத்தை விரைவாகவும், சிறப்பாகச் செயல்படுத்த இத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வேலைவாய்ப்பு
இத்திட்டம் முடிவு பெறும் போது பல ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக் கிடைப்பது மட்டும் அல்லாமல் மாநிலத்தின் வருவாய் பெரிய அளவில் மேம்படுத்த முடியும் எனவும் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.